Wednesday, April 8, 2009

மற்றும் காமம்..

நேற்றிரவு
‘அத்தைமடி மெத்தையடி..’
பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தோம்
மாசமாக இருக்கும்
என் தங்கைக்கு
போன் செய்யத்துவங்கினாய் நீ.!

********

நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பு
மற்றும் காமம்.!

********

உன் அறிவும் திறனும் ஆளுமையும்
என்னை வியக்கச்செய்கிறது
இருப்பினும்
இரவுகளில்
ஒரு மாணவியைப்போல
இரந்து நிற்கிறாய்.!

********

ஒரு தக்கையைப்போல
காதலின் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டேயிருந்தேன்
நீ வந்தாய்,
ஒரு கல்லைப்போல
மூழ்கிப்போய்விட்டேன்.!

.

Saturday, March 14, 2009

வெட்கத்தால் செய்யப்பட்ட அழகு!

தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்
என்றேன்
சிணுங்கினாய்
தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு.!

********

ரயிலடியில்
மழைபெய்தாலே போதும்..
உன் ஞாபகத்தில்
என் நினைவுகள்
‘சொத சொத’வென நனைந்துவிடுகின்றன.

********

உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.

********

என் காதல்
திசைமறந்த ஒரு வண்டைப்போல
உன்னையே சுற்றிச் சுற்றி வருகிறது.

.

Tuesday, March 10, 2009

காதலின் பக்கவிளைவுகள்

அட்டைகள் தீர்ந்துபோன
எடைகாட்டும் எந்திரத்தில்
ஏறி நிற்கிறாள் அந்தச்சிறுமி.
நான் உன்னைக் காதலிக்கிறேன்.

********
ஏற வேண்டிய பேருந்தை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தவறவிடுகிறேன்
நேரங்கெட்ட நேரத்தில்
மாலை ஐந்து மணிக்கு தூக்கம் வருகிறது
விழித்தால்
விடியற்காலையா அந்திமாலையா குழப்பம் வருகிறது
பேசுபவர்களிடம்
காதுகளை விடுத்து கண்களைத் தருகிறேன்
காதலின் பக்கவிளைவுகளுக்கான பட்டியல்
நீண்டுகொண்டேயிருக்கிறது.

********
பளிங்கு போன்ற நீரோடை
பாலைப் போன்ற நீர்வீழ்ச்சி
பழமரங்கள் தேனடைகள்
பச்சைப்பசேலென்ற வனம்
தென்றலுடன் கொஞ்சம் சாரல்
உன்னுடனான எனது இரவு.

********
நெருங்கி வந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்
நீ விழித்திருக்கிறாய்
என்பது உறக்கத்திலும் புரிகிறது
காதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்
சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.

.

Saturday, September 20, 2008

இரண்டாவது இரவு

திருமண‌மாகி பல நாட்களுக்குப்பிறகு
முதல் முறையாக நீ அழைத்த அந்த நாளை
நினைவிருக்கிறதா உனக்கு?
அன்றுதான் நிகழ்ந்தது அந்த இரண்டாவது இரவு.

*******

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்.!

*******

எல்லா நேரங்களிலும்
ஒரு குழந்தையைப்போல
தெரிந்துகொள்வதற்காக‌
என்னையே சார்ந்து நிற்கிறாய்.
இர‌வுக‌ளில்நான் உன்னைச்சார்ந்து நிற்கிறேன்.

*******

என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!


Friday, July 25, 2008

சிரிப்பாய் சிரிக்கும் கவிதைகள்

கவிதைகளை
எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!

*****

ஒவ்வொரு நாளும்
அலுவலகம் கிளம்பும்போதும்
மழையைப் போலவே என்னைத்தடுக்கிறாய்.
வெளியே மழையாகவும்
உள்ளே குடையாகவும்
ஒரே சமயத்தில் நீ.
உன் மீதான விருப்பமா தணியப் போகிறது?
இந்த மழையில் நனைந்தேதான்
இந்த வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது.!

*****

ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!

*****

தீவிரமான அலுவலில் மூழ்கியிருக்கும் போதும்
உனக்கான ஒரு கவிதை
நெஞ்சில்
உருவாகிக்கொண்டேயிருக்கிறது.

.

Tuesday, June 24, 2008

முதல் இரவு

இத்தனை வருடக் காத்திருத்தலுக்குபின்
வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.

******

வாழ்வின் வழிநெடுகிலும்
தவிக்கின்ற தாகத்தைத் தீர்க்கின்ற
மழையாய்
இந்தக்காதல்
இருந்துகொண்டேயிருக்கிறது.!

******

நான் கொதிக்கும் நீரைப்போல
ஆவியாகிறேன்
நீ குளிர்ந்த காற்றைப்போல
நீராகிறாய்.!

******

ஒரு ஒளிப்புள்ளி ஒளிவட்டமாய் சிதறுவதைப்போல
என் காதல் உன்னைச் சுற்றிலும்
சிதறிக்கொண்டேயிருக்கிறது.

.

Saturday, May 24, 2008

நீ முத்தமிடும் அழகு

நீ முத்தமிடும் அழகை
ஒவ்வொரு முறையும் என் கவிதை சொல்ல முயன்று
தோற்றுப்போகும்.!

******

நீ எப்போதெல்லாம்
பச்சை சேலை கட்டிக்கொள்கிறாயோ
அப்போதெல்லாம் நான் சீக்கிரமாக
வேலைக்குச் செல்லமுடிவதில்லை!

******

எப்போதாவது தோன்றுகிறது
இன்னும் எதுவும் முடியவில்லை என.!

******

எல்லோருமே கண்ணாடியை பார்த்துக்கொள்கிறார்கள்
அழகு
உன் முகத்தைப்பார்த்துக்கொள்கிறது.!

.

மழையாக வந்தாய்!

தாளமுடியாத வேட்கையில் வெடித்துக்கிடந்தேன்
உடலும் மனமும் குளிரக் குளிர மழையாக வந்தாய்.!

******

எல்லாத்திசைகளிலிருந்தும் உன்னைத் தழுவமுடியவில்லையே
இந்தக் காற்றைப்போல.!

******

பார்த்துக்கொண்டிருக்கும்போதே
பிரமாண்டமாகிவிடுகிறது உன் அழகு
இந்த மனிதப் பார்வை போதவில்லை எனக்கு.!

******

உறங்கிக்கொண்டிருக்கும் உன்னைத் தொல்லை செய்யவேண்டும்
உடுத்திக் கொண்டிருக்கும் உன்னைத் தொல்லை செய்யவேண்டும்
உணவெடுத்துக் கொண்டிருக்கும் உன்னையே
உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்
உன்னைச் சேரவேண்டிய காதலால் நிரம்பி
மூர்ச்சையடைந்துகொண்டிருக்கிறேன்...
எல்லாம் முடிந்துவிடும் முன்பே வா !

.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP